மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பின்னர் ரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றறிக்கையில் மருந்தாளர்களுக்கான கொடுப்பனவு “மேலதிக நேர கொடுப்பனவுகள்” என திருத்தப்பட்டிருந்த போதிலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மருத்துவச் சேவையின் தலையீட்டால் அது ரத்து செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரச்சினைக்கு இதுவரை அதிகாரிகளால் திருப்திகரமான தீர்வு வழங்கப்படாததால், ரத்து செய்யப்பட்ட சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மனிதாபிமானக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அனைத்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் மனநல வைத்தியசாலைகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலக்களிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வைத்தியசாலைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய மருந்தக சேவைகளை தொடர்வதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பணிப்புறக்கணிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.








