வெனிசுலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது உலக வரலாற்றில் இதுவரை இடம்பெற்ற மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளத்தைக் கொண்ட 17 எண்ணெய் வயல்களை அபிவிருத்தி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும்.
எனினும், குறித்த அளவு வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் வெனிசுலாவின் பெட்ரோலியத் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்க முடியும் எனவும், அந்நாட்டு அரசாங்கத்திற்கு 209 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்பட்டால், நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வெனிசுலாவின் பாரிய எண்ணெய் வளங்களை அபிவிருத்தி செய்வதில் அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







