இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய சந்தையாக உருவெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் தரவுகளின்படி, 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதே காலப்பகுதியில் இலங்கைக்கான இந்தியாவின் கப்பல் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட இலங்கைக்கான கப்பல் ஏற்றுமதி, இந்த ஆண்டு 56.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களுக்கான கேள்வி அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை காரணமாக, இந்தியாவுக்கான முக்கிய கடல்சார் சந்தையாக இலங்கை மாறி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியக் கப்பல் கட்டுமான நிறுவனங்களுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும் பட்சத்தில், இலங்கையின் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளில் புதிய முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கடல்சார் தொழில்துறை உறவுகள் மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







