கிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக யுனிசெஃப் முன்னெடுத்து வரும் பணிகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் யுனிசெஃப் இலங்கை பிரதிநிதி எம்மா பிரிகாம் ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் உரிமைகள் உள்ளிட்ட விடயங்களில் கிழக்கு மாகாணத்தில் யுனிசெஃப் முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருகோணமலையில் இயங்கி வரும் யுனிசெஃப் அலுவலகம் 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிசெஃபின் உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய உத்திசார் திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அலுவலகம் மூடப்படுவது கிழக்கு மாகாணத்திற்கான யுனிசெஃபின் பணிகள் நிறைவடைவதை குறிக்காது எனவும், மாகாணத்தின் குழந்தைகள் மற்றும் சமூகங்களின் தேவைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் மாகாண நிறுவனங்களுடன் எதிர்காலத்திலும் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு உரிய நேரத்தில் தீர்வுகளை வழங்குவதற்கான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.








