ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ‘பட்டுவத்தை சாமர’ என அழைக்கப்படும் மனோஜ் சுரங்க லியனகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்குச் சொந்தமான சொகுசு வாகனம் மற்றும் சுமார் 400 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் இன்று (03) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த தகவல்களை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்களை சேர்த்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்களின் தோற்றம் மற்றும் சந்தேகநபரின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.








