மயிலத்தமடு,மாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் ஆக்கிரமிப்புகளை முன்னெடுத்துள்ள நிலையில் கால்நடைகள் மீதும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மேய்ச்சல் தரைப்பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் நேற்றைய தினம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பி கந்தசாமி பிரபு தலைமை இக் கூட்டம் இடம்பெற்றது.













பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் அரச மற்றும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கல்வி சுகாதாரம் வீடமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.
அத்துடன் குறிப்பாக ஏறாவூபற்று பிரதேச எல்லைக்குள் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பாக ஆராயப்பட்டதுடன் , ஏறாவூர் நகர சபையால் கொட்டப்படும் குப்பை மற்றும் விலங்கு கழிவுகளால் மக்கள் பாதிப்படைகிற விடயம் தொடர்பாகவும் , மற்றும் விவசாயிகள் , கால்நடை வளர்ப்பாளர்கள் முன்வைத்த பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக எதிர்வரும் மாரிமழைக்காலத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கஷ்டப் பிரதேசங்களுக்குச் செல்லும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை சீரமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.







