மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னையின் திருத்தலம் நோக்கிய வருடாந்த பாதயாத்திரை இன்று (05) சனிக்கிழமை அதிகாலை பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் பாதயாத்திரையில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புனித மடு பேராலயத்திற்கு அடுத்ததாக அதிகளவான பக்தர்கள் பாதயாத்திரையாகச் செல்லும் முக்கியமான திருத்தலமாக ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயம் விளங்குகின்றது.

இவ்வாண்டுக்கான பாதயாத்திரை மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியைத் தொடர்ந்து காலை 5.30 மணியளவில் ஆரம்பமானது.
பாதயாத்திரையில் விசேட சொரூபமும் பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. புளியந்தீவிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை வீச்சுக்கல்முனை சந்தனமாதா ஆலயம் ஊடாகச் சென்று, வலையிறவுப் பாலத்தைக் கடந்து வவுணதீவு வழியாக ஆயித்தியமலை திருத்தலத்தை சென்றடைந்தது.
இதேவேளை, செங்கலடி பகுதியிலிருந்தும் இன்று அதிகாலை ஆயித்தியமலை நோக்கி மற்றுமொரு பாதயாத்திரை இடம்பெற்றதுடன், அதிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நாளை (06) ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளது.
திருவிழாவின் இறுதி நாளை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு சிங்கள மொழியிலான முதல் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வரவேற்பு நிகழ்வுடன் பெருவிழா கூட்டுத்திருப்பலியும் இடம்பெறவுள்ளது.
அன்னையின் இறுதி பெருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை பி. அன்டன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது.

















