கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை, பள்ளியவத்தை – டேன் லங்கா வீதியில் உள்ள வீடொன்றில் 18 வயதுடைய யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதி தனது பெற்றோரின் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்து தங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த யுவதி மற்றும் சந்தேகநபர் இடையே காதல் உறவு இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நஞ்சு அருந்தி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், குறித்த சந்தேகநபர் கடந்த 2020ஆம் ஆண்டு அவசகவெல்ல பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் எனவும், அந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.








