பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 800,000 அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்பதற்கு எந்தவொரு உறுதியான சான்றுகளும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கியதாகக் கூறப்படும் தனிப்பட்ட வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, குறித்த பணத்தை இலஞ்சம் எனக் கூற முடியாது என குறிப்பிட்டார்.
ஒருவர் மற்றொருவருக்கு பணம் வழங்குவதாலோ அல்லது பணத்தை மேசையில் வைத்துச் செல்வதாலோ, அது நேரடியாக இலஞ்சப் பணமாக மாறிவிடாது எனவும் கம்மன்பில தெரிவித்தார்.
அதேவேளை, ஒருவர் பெற்றுக்கொள்ளும் பணம் பின்னர் நன்கொடையாகவோ, ஏதேனும் அமைப்புகளுக்கோ அல்லது அரசியல் நடவடிக்கைகளுக்கோ வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பணத்தின் மூலத்தை அறியாமல் அல்லது அதன் பயன்பாட்டை உறுதிப்படுத்தாமல், பணத்தைப் பெற்றுக்கொண்ட நபருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.








