சுகாதாரத்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் நினைத்த நேரங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்லும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
“சுகாதாரத்துறையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரவுள்ளோம். மக்கள் நினைத்த நேரங்களில் வைத்தியசாலைகளுக்குச் செல்லும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, குடும்ப வைத்தியர் நிலையங்களை உருவாக்குவோம்.
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் பிரதான வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத நடைமுறையை உருவாக்கவுள்ளோம். தற்போது சந்தைக்கு வந்தாலும் வைத்தியசாலைக்குச் செல்கின்றனர். சந்திக்கு வந்தாலும் வைத்தியசாலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு செல்ல முடியாது. பிரதான வைத்தியசாலைக்குச் செல்ல குடும்ப வைத்தியரின் பரிந்துரை அவசியமாகும்.
நாட்டின் சனத்தொகை 22 மில்லியனாக உள்ள நிலையில், வருடாந்தம் சுமார் 80 மில்லியன் பேர் வெளிநோயாளர் பிரிவுகளில் மருத்துவ சேவைகளைப் பெறுகின்றனர். இதன்படி ஒருவர் வருடத்திற்கு ஏழு அல்லது எட்டு தடவைகள் வைத்தியசாலைக்குச் செல்கின்றார்.
தரமான பரிந்துரை முறைமை இல்லாமையே இதற்கான முக்கிய காரணமாகும். எங்கு செல்ல வேண்டும் என்பதை நோயாளியே தீர்மானிக்கின்றார்.
இதற்குத் தீர்வாக அடுத்த வருடம் 1,000 ‘ஆரோக்யா’ வைத்திய நிலையங்களை அமைக்க தீர்மானித்துள்ளோம். கனிஷ்ட வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் பிரதான வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத வகையில் இந்த முறைமை அமுல்படுத்தப்படும்.
அதேபோன்று மருந்துகளை முறையாகப் பயன்படுத்தாத நிலையும் காணப்படுகிறது. வைத்தியர் கொத்தமல்லி குடித்துவிட்டு ஓய்வெடுக்குமாறு கூறினால், சிலர் மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் அதனைச் செய்கின்றனர். மருந்து வழங்கப்பட்டாலும் அனைத்தையும் முறையாக உட்கொள்வதில்லை. மூன்று நாட்களுக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டுமென கூறினால், ஒரு தடவை மாத்திரமே மருந்தை உட்கொள்கின்றனர்.
இவ்வாறான நிலை மருந்துகளின் வீண்விரயத்திற்கு வழிவகுக்கிறது. இதனை நிறுத்த வேண்டும்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.







