மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து கடமைக்குப் பங்கம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற பிடியாணை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, இன்று (08) செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (07) உத்தரவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்குள்ள அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தனர்.

இதையடுத்து, வாக்குமூலம் வழங்குவதற்காகச் சம்பவ தினமான திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த தேரரை, மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸார் கைது செய்தனர்.
அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் முன்னர் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததையடுத்து பிறப்பிக்கப்பட்டிருந்த இரு பிடியாணைகளின் அடிப்படையிலும் கைது செய்யப்பட்ட தேரரை பொலிசார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், பிடியாணை தொடர்பான வழக்கில் ஒரு இலட்சம் ரூபா பிணையில், இருவர் உத்தரவாதத்துடன் தேரரை விடுவித்தார். எனினும், சுரங்க பணியக அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.








