தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியாலும் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது ஆட்சியிலிருந்து அகற்றவோ முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று (12) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்களின் வலுவான ஆதரவு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மக்கள் வழங்கிய ஆணை அரசாங்கத்தின் பக்கமே தொடர்ந்தும் இருப்பதாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகள் மக்களை ஒன்றுதிரட்டி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்கள் அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது எனவும், இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக எவ்வித பயனையும் ஏற்படுத்தாது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் முயற்சிகளாகவே அமைவதாகவும், அவை அரசியல் நோக்கங்களையும் சுயநல அஜண்டாக்களையும் அடிப்படையாகக் கொண்டவை எனவும் பிமல் ரத்நாயக்க குற்றம் சாட்டினார்.
மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தை எந்தவொரு சக்தியாலும் அசைக்க முடியாது என தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டார்.








