சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையில், 43 வயதுடைய உகண்டா பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் முதலில் உகண்டாவில் இருந்து கட்டாருக்குச் சென்றுள்ளதுடன், அங்கிருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR-664 விமானம் மூலம் நேற்று (13) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், அவர் நேற்று மதியம் வரை விமான நிலையத்தின் முதல் மாடியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவர் விழுங்கியிருந்த 13 கொக்கைன் உருண்டைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரின் உடலில் எஞ்சியுள்ள போதைப்பொருள் உருண்டைகளை வெளியேற்றுவதற்காக, அவரை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.








