தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்காக முச்சக்கரவண்டியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
மேலும், தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, சம்பவம் இடம்பெற்ற அதே தினம் பாதுக்க, இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த முச்சக்கரவண்டியை தாக்குதலுக்காக வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலின் பின்னணி மற்றும் அதில் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.








