சிறிய முரல் மீன் பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு படகிற்கு 35,000 ரூபா வீதம் 20 படகு உரிமையாளர்களிடமிருந்து சுமார் 7 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமாரும், அந்த அமைப்பின் தலைவரும் ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தருமான முத்துலிங்கம் ஆகியோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
2025ஆம் ஆண்டு சுருக்கு வலை மூலம் சிறிய முரல் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான அனுமதியை புதுப்பிப்பதில் அதிகாரிகள் தாமதம் ஏற்படுத்தியதாகவும், பின்னர் ஒரு படகிற்கு 50,000 ரூபா வரை கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 35,000 ரூபா வீதம் பணம் வழங்கிய 20 படகு உரிமையாளர்கள் அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாகவும், இரண்டு படகுகளுக்காக 70,000 ரூபா வழங்கிய ஒருவருக்கு இதுவரை அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, இலஞ்சமாக பெறப்பட்ட பணத்தை மீனவர்களிடம் மீள வழங்குவதுடன், பணம் செலுத்த முடியாத மீனவர்களுக்கும் அனுமதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.







