கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று (15) காலை முதல் பெய்து வரும் கனமழையால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
நுகேகொட – நாவல பிரதான வீதி நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஆமர் வீதி, கோட்டை, தெமட்டகொட உள்ளிட்ட பகுதிகளிலும் சில வீதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், இடியுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக இந்த மழை நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், வெள்ள அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.








