அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பேரணியின் போது, தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேரணியில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரால் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் மாநகர சபை மைதானத்தில் SLPP ஏற்பாடு செய்திருந்த பேரணியில் உரையாற்றிய அர்ச்சுனா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை உள்ளடக்கிய அரசியல் ஒப்பீட்டின்போது தன்னை “புலி” எனக் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்தக் கருத்துகள் தொடர்பில் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து TID விசாரணைக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற குறித்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதே சமயம் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.








