உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு பிரிவு பிரதானி சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான தகவல்களை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், நேற்றைய விசாரணையின்போதும் வைத்தியசாலை பணிப்பாளர் குறித்த மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.
இதேவேளை, சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவுக்கும் தேவையான நோயறிதல் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இதுவரை வழங்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கைகளை வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவக் குழுவிடம் அனுப்பி வைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய சந்தேகநபராக உள்ளார்.
இந்நிலையில், அவர் 100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.








