சவுதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன், சவுதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்தினால் பேஸ்புக் பதிவொன்றில் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் முஹம்மது தொடர்பாக அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டிருந்தார்.
முதற்கட்ட தீர்ப்பில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. மேலும், குறித்த பதிவுடன் தொடர்புடைய மின்னணு சாதனத்தை பறிமுதல் செய்வதற்கும் சமூக ஊடகக் கணக்கை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டிருந்ததாக இலங்கை தூதரகத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், குறித்த தீர்ப்புக்கு எதிராக அனோஜன் மேன்முறையீடு செய்த நிலையில், அவரது தண்டனை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், செப்டெம்பர் 17ஆம் திகதி வெளியான தகவலின்படி, மேன்முறையீட்டின் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வரும் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை மேற்கோள் காட்டி Jaffna Monitor செய்தி வெளியிட்டுள்ளது.
அனோஜனின் குடும்பத்தினர் முன்னதாக, தண்டனையை குறைக்கவும் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் சர்வதேச உதவியை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரிடம் முறையிட்டிருந்தனர். அதேவேளை, மேன்முறையீட்டுக்கான சட்டச் செலவுகளை குடும்பத்தினர் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனோஜன் குறித்த சர்ச்சை, இலங்கையில் சமூக ஊடகங்களில் இடம்பெற்ற கடுமையான கருத்துப் பரிமாற்றங்களின் பின்னணியில் உருவானதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த பேஸ்புக் பதிவை அவர் பின்னர் நீக்கியதுடன், தனது கருத்துக்காக மன்னிப்பும் கோரியதாக மட்டக்களப்பு மாவட்ட சர்வமத ஒன்றியம் முன்னதாக தெரிவித்திருந்தது.
அனோஜனுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது குடும்பத்தினரிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இலங்கை அரசாங்கம் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் அவசரமாக தலையிட்டு, சட்டரீதியான மற்றும் மனிதாபிமான அடிப்படையில் அனோஜனுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன.








