மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உள்ளுராட்சி சபைகளில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள் மக்களுக்கு சென்றடையகூடாது, அது மக்களுக்கு சென்றடையாவிட்டால் அதன்மூலம் மக்களின் எதிர்ப்பு தமிழரசுக்கட்சிக்கு வரும் என்ற வகையில் சிலர் செயற்பாடுகளை இன்றும் முன்னெடுப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி ஊடாக உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், முதல்வர், தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், பிரதி முதல்வர் ஆகியோருக்கான இருநாள் செயலமர்வு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.
நேற்று மாலை செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

















இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.
இந்த செயலமர்வினை இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், வடகிழக்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையே இவ்வாறான செயலமர்வு ஒன்றிணை நடாத்தியிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு சபைகள் இலங்கை தமிழரசுக்கட்சி வசம் இருக்கின்றபோது நாங்கள் மக்களுக்கான சேவையினை வழங்குவதிலிருந்து தவறுவோமாகயிருந்தால் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் அதன் தாக்கத்தினை நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமைவரும்.
சில சபைகளில் அதிரடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் மக்கள் சார்ந்தவையாக இருந்தாலும் எமது கட்சிக்கு எதிராக சமூகங்களுக்குள் இருக்கும் சிலர் அதனை வைத்து சில குழப்பங்களை ஏற்படுத்திவருகின்றனர். அதிலே எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை பொதுமக்கள் வரவேற்கும் நிலையும் உள்ளது.
சபைகள் மூலம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு, வேலைத்திட்டங்களுக்கு மக்களின் ஆதரவினை முதலில் திரட்டவேண்டும். பிரதேசசபைகளில் எடுக்கும் தீர்மானங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்குமானால் அந்த தீர்மானங்களினால் பாதிக்கப்படுபவர்களினால் சபைக்கு எதிராக எதனையும் செய்யமுடியாத நிலையேற்படும்- என்றார்.








