காவல்துறை மா அதிபராக நியமனம் செய்வதற்கு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை நேற்றைய தினம் (07.08.2025) கூடியது.

இருப்பினும், அரசியலமைப்பு பேரவையின் நிகழ்ச்சி நிரலில் காவல்துறை மா அதிபர் தொடர்பான விடயம் இல்லாதமையால் இந்த பெயர் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த விடயம் குறித்து விவாதிக்க அரசியலமைப்பு பேரவை, அடுத்த வாரம், செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்பட்ட பின்னணியில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








