முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 2025 எதிர்வரும் 15ம் திகதி, வெள்ளிக்கிழமை ‘கதவடைப்பு’ போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘கடந்த 7 ஆம் திகதியன்று, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.

நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்துகின்றேன்.’என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் “நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள்ளார்.








