மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரையானது வெள்ளிக்கிழமை (05) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.



மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான ஆன்மீக பாதயாத்திரையில் இருநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நந்திக்கொடி ஏந்தியவாறு தங்கள் வேண்டுதலை வேண்டி அரோகரா கோசத்துடன் சென்றனர்.
குறித்த ஆன்மீக பாதயாத்திரையானது 05ம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 11ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளதுடன், மண்டூர் கந்தசுவாமி ஆலய் தொடக்கம் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயம் வரையான பிரதான வீதிகளில் உள்ள ஆலயங்களுக்கு கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டு செல்வார்கள்.

இப்பாதயாத்திரையின் போது வெள்ளிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை இரவு கிரான்குளம் கணபதிப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடையும். பின்னர் சனிக்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினை சென்றடைந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பின்னர் இரவு வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்தினை சென்றடையும்.
திங்கட்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்தை சென்றடையும். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு வாகரை மாங்கேணி செல்வ விநாயகர் ஆலயத்தை சென்றடையும்.

செவ்வாய்க்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு வாகரை சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடையும். பின்னர் புதன்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பகல் கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து, பிற்பகல் வேளை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடையும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் அடியார்களுக்கு உணவு வசதிகள், ஆலயங்களில் தங்குமிட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், யாத்திரையில் கலந்து கொள்ளும் அடியார்கள் தங்கள் பகுதி ஆலயங்களுக்கு வருகை போதும் அவ்விடத்திலும் இருந்து இணைந்து கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.








