எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தபோது தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு “சமட்டசமன” எனும் வீட்டு திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் கைவிடப்பட்டதுடன், கல்வெட்டுக்களில் பெயர் பொறிப்பதற்கு 2 கோடிகளுக்கு மேல் செலவு செய்து இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனதேசிய மக்கள் சக்தி மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள திமிலைதீவு உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு மில்லியன் ரூபா நிதியுதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை சம்பிரதாய பூர்வமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05) மக்களிடம் கையளித்த பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த காலத்தில் சஜித் பிரேமதாச மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டு திட்டங்கள் அத்திவாரம் இடப்பட்டு, கைவிடப்பட்டிருந்தது. அந்த வீடுகள் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமலே அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற அரசியல் நோக்கத்துக்காகவே ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டது
2015 மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 வீட்டு தொகுதிகள் அமைக்க என ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட இந்த வீட்டு திட்டம் 10 வருடங்களுக்கு பின்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கைவிடப்பட்டிருக்கும் வீட்டு தொகுதிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து புனர்நிர்மாணம் செய்து முடிவடையும் நிலையில் உள்ளது.
சஜித் பிரேமதாச சமட்ட சமன என குறிப்பிடும் வேலைத்திட்டத்தின் ஊடாக வீட்டு தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான கையளிக்கும் போது தமது பெயர்களை கல்வெட்டுக்களில் பொறிப்பதற்கு 2 கோடிகளுக்கு மேல் செலவு செய்ததாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகிறது.

இது தங்களது அரசியல் நோக்கத்துக்காக வழங்கப்பட்ட வேலைத்திட்டமே தவிர மக்களின் அத்தியாவசியமானது மற்றும் வீடுகளை நிர்மாணிக்கும் நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்பதுடன் அதிலும் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பல குற்றச் சாட்டுக்கள் கிடைக்க பெற்றிருக்கின்றன. இந்த மோசடிகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை காணியுள்ளதாக இருந்தும் வீடு கட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு, ஒரு மில்லியன் ரூபா நிதியுதவியின் மூலம் வீடுகள் கட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக என். எச். சி. ஏ வீட்டு தொகுதிக்காக முதல்கட்டமாக 70 வீடுகளும் இரண்டாவது கட்டமாக 27 வீடுகள் உட்பட 97 வீடுகளை மாவட்டத்தில் மிக குறுகிய காலத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளித்து வருகிறோம் என்றார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








