ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, பல அமைச்சுகளின் செயல்பாடுகளையும் அவற்றின் கீழ் வரும் நிறுவனங்களையும் மறுவரையறை செய்து, விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 18ஆம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பிலிருந்த சிவில் பாதுகாப்புத்திணைக்களம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளது. அதேவேளை தேசிய நீரியல் சபை மற்றும் இலங்கை தேசிய நீரியல் அலுவலகம் என்பன புதிதாக பாதுகாப்பு அமைச்சில் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் சிவில் பாதுகாப்பு திணைக்களம், இலங்கை சர்வதேச நடுவர் தீர்ப்பு நிலையம், புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயக அலுவலகம் என்பன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

நிதி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி முகாமைத்துவ அமைச்சின் கீழ் ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம், சூதாட்ட கட்டுப்பாட்டு அதிகாரசபை என்பன புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
வலு சக்தி அமைச்சின் பொறுப்பிலிருந்த அணுசக்தி சபை மற்றும் அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபை என்பன அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளது. லங்கா மின்சார நிறுவனம் (தனியார்) லிமிடட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் புதிதாக இவ் அமைச்சில் சேர்க்கப்பட்டுள்ளன.
கறுவா அபிவிருத்தி திணைக்களம் விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சில் சேர்க்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பொறுப்பிலிருந்த இலங்கை திரிபோஷா தயாரிப்பு நிறுவனம் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேவேளை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம், ஆயுர்வேத கல்வி மற்றும் சுகாதார சபை மற்றும் இலங்கை தாதியர் சபை என்பன சுகாதார அமைச்சின் கீழ் பொறுப்பாக்கப்பட்டுள்ளன.
இணைய பாதுகாப்பு ஆணைக்குழு, கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ கம்பனி என்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் சேர்க்கப்பட்டுள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம், உலக உணவு திட்ட ஒத்துழைப்பிற்கான பங்காளித்துவ செயலகம் என்பன கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் சேர்க்கப்பட்டுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மற்றும் ஜி.எஸ்.எம்.பி. தொழிநுட்ப சேவைகள் தனியார் நிறுவனம் என்பன கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்தோடு புதிதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் வீதி அபிவிருத்தி அதிகார சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை புகையிரத திணைக்களம், வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் அதன் துணை நிறுவனங்கள், லங்கா கப்பல் கூட்டுத்தாபனம் லிமிடெட், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (லங்கா) லிமிடெட், மற்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் என்பன துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம், கட்டுமானப் பொருட்கள் கூட்டுத்தாபனம் லிமிடெட், மற்றும் தேசிய இயந்திர நிறுவனம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மற்றும் சமூக நீர் வழங்கல் திணைக்களம் என்பன வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








