முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதனால் பழி தீர்க்கும் நோக்குடன் கொரோனா காலத்தில் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் கொரோனா காலத்தில் மரணமடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை விபரங்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதன் பின் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் என்னால் முன்மொழிவு 09ம் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான விபரங்களை விரைவில் சமர்ப்பிப்பதாக சுகாதார அமைச்சர் வாக்குறுதியளித்தும் இதுவரையும் எரிக்கப்பட்டவர்களின் விபரங்களை சமர்ப்பிக்காத நிலைமை தொடர்வது குறித்து முஸ்லிம் சமூகம் மிக கவலையடைகிறது என சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கௌரவ சுகாதார அமைச்சரிடம் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ றவூப் ஹக்கீம் M.P அவர்கள் இப்பாராளுமன்றத்தில் கொரோனாவினால் மரணமடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை கேட்டிருந்தார்.
அதன் பின் நான் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் (2025.09.11 ஆம் திகதி, முன்மொழிவு இலக்கம் 229) கொரோனாவினால் மரணமடைந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு முன்மொழிவினை வைத்தேன்.
இதுவரையும் எனது முன்மொழிவிற்கான பதில் சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது என்பதனை மிக வேதனையுடன் கௌரவ அமைச்சர் அவர்களிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். முன்மொழிவின் பிரதியினை இப்பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
புதிய அரசாங்க காலத்தில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களை எரிக்கவில்லை. கோத்தபாய ஜனாதிபதி எங்களது முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால்தான் எங்களின் ஜனாஸாக்களை எரித்தார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையாகும். நீதி மறுக்கப்பட்ட எமது சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கையினை ஏன் இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என்பதனை வேதனையுடன் கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.








