சுனாமி அனர்த்த காலப்பகுதியில் உதவிய மக்களுக்கு மட்டக்களப்பு மாநகர மக்களின் உதவிகள் சென்றதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் இந்த உதவிக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேநேரம் மாநகரசபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொதிகளை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மக்களுக்கு விநியோகம் செய்வதாக நேற்று முன்தினம் ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மாநகரசபையின் ஆணையாளர் நா.தனஞ்செயன் மறுத்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த மறுப்பினை அவர் வெளியிட்டார்.

மாநகரசபையின் செயற்பாடுகளுக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டவருக்கு எதிராக நடவடிக்கையினை எடுக்கப்போவதாக பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டு.மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன்,
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையான வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையினால் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
மாநகரசபை உறுப்பினர்கள் எந்தவித அரசியல்வேறுபாடுகளுமின்றி அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மாநகரசபையின் ஆணையாளர்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இந்த நிவாரணங்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரணங்களை வழங்கியிருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நான்கு இடங்களில் இந்த நிவாரண சேகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது மாநகர மக்கள் மனமுவந்து நிவாரணங்களை வழங்கிவைத்தார்கள்.








