கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களை முற்றாக மறுப்பதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் நாட்டின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மாநகரசபை பொதுமக்களிடமிருந்து அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த அனர்த்தத்தில் பலர் உயிரிழந்ததையும், ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதையும் கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் நோக்குடனும், இம்முறை கேளிக்கைகள் மற்றும் கொண்டாட்டங்களை தவிர்க்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பிற்காக, நத்தார் பண்டிகை காலத்தில் வீணான களியாட்டங்கள் மற்றும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து, அந்த வளங்களை பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்திருந்த கோரிக்கையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, இம்முறை மட்டக்களப்பு மாநகரசபையால் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பு விழாக்கள் நடத்தப்படவில்லை என்றும், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை உணர்ந்து அவர்களுடன் ஒற்றுமை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் கூறினார்.








