சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி கூட்டங்களுக்கு தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக குழப்பங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி கூட்டங்களின் நேரங்களை வீணடிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பிரபு தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று முன்தினம் 14 மாலை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில்ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் ஒழுங்கமைப்பில், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன் ,இ.சிறிநாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பூர்த்தியடையாத திட்டங்களை பூரண படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதேபோன்று நீர்பாசனம்,விவசாயம்,வீதி புரமைப்பு,உள்ளுராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் என பல்வேறுபட்ட திணைக்களங்களின் செயற்பாடுகள் அவர்கள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்து ஆராயப்பட்டது.








