இலங்கை உயர் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் யாத்திரைக்கான வழிகாட்டுதல்களை மீறி, புதிய ஹஜ் குழு தன்னிச்சையாக செயற்படுவதாகக் கூறி அகில இலங்கை ஹஜ் சுற்றுலா முகவர்கள் சங்கம் (ACHTOA) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட திரு. ரியாஸ் மிஹுலார் தலைமையிலான ஹஜ் குழு, முகவர் மதிப்பீடு மற்றும் ஒதுக்கீட்டு முறைகளில் சட்டவிரோதமான மாற்றங்களைச் செய்துள்ளதாக கடந்த ஜனவரி 2ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 2026 ஆண்டுக்கான ஹஜ் யாத்திரீகர்கள் தலா 750,000 ரூபாவை முன்கூட்டியே வைப்பிலிட வேண்டும் என்ற கட்டாய நடைமுறை மற்றும் அமானா வங்கியுடன் தொடர்புடைய 26.6 மில்லியன் ரூபா நிதிச் சுமையை முகவர்கள் மீது சுமத்தியமை ஆகியன இதில் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மேலும், விசா முறைகேடுகள், முன்னதாக தடைசெய்யப்பட்ட முகவர்களுக்கு மீண்டும் உரிமம் வழங்கியமை மற்றும் சவுதி அரேபியாவின் நிலையான ஒதுக்கீட்டு முறைக்கு முரணான நடைமுறைகளை அமுல்படுத்தியமை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர், ஹஜ் குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பான அமைச்சர்கள் உட்பட 103 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் வரும் ஜனவரி 21, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








