இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்படுகின்றார் எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் நேற்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் இளைஞர் செயலாளர் குமார ராஜரத்ன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட சில உரைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள், நாட்டில் வாழும் இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தூண்டுவதாக உள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அவரை உடனடியாகக் கைது செய்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டுமெனவும் அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கும் இன ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி தரப்பிலிருந்து அல்லது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வெளியிடப்படவில்லை.








