அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று 23 முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
அந்த அடிப்படியில் மட்டக்களப்பு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) தமது உறுப்பினர்கள் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும், பொதுமக்களுக்கு தடையற்ற விசேட மருத்துவ சேவைகள் வழமைபோல் தொடரும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது,
இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
“விசேட வைத்திய நிபுணர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தாமதப்படுத்தும் அல்லது பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் எமது சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. இத்தகைய தாமதங்கள் தொழில்முறை ஸ்திரத்தன்மைக்கும் நோயாளர் பராமரிப்பின் தரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் கருதுகிறது.

சுகாதாரத் துறையின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுமே சிறந்த வழிமுறைகள் என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) நம்புகிறது. நோயாளர்களின் உரிமையையும் வைத்தியர்களின் தொழில்முறை நேர்மையையும் பாதுகாக்க எமது சங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும்.” என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த அறிவிப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








