கினிகத்தேன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்து; 80 பயணிகளின் உயிர்தப்பினர்
தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடவத்தை இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று திடீரென செயலிழந்த நிலையில் விபத்துக்குள்ளானதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (26) அதிகாலை 5.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள கினிகத்தேன கடவல மஹா வங்குவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பஸ் ஒரு வளைவை எடுக்க முயன்றபோது அதைக் கட்டுப்படுத்த இரண்டாவது கியருக்கு மாற்றியதாக, மூன்று குழந்தைகளின் தந்தையான பஸ் சாரதி மகேஷ் சுதர்சன் (வயது 49) தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பஸ்ஸின் பிரேக் அமைப்பு திடீரென செயலிழந்ததாகவும், இதன் காரணமாக பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கடும் மழை பெய்துகொண்டிருந்த போது சாய்வான பகுதியில் பஸ்ஸை மண் மேட்டில் மோதி சாரதி நிறுத்தியுள்ளார், இதனாலே பெரும் விபத்து ஒன்றைத் தவிர்க்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நேரத்தில் பஸ்ஸில் சுமார் 80 பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில், பஸ் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வேறு பஸ்ஸில் மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








