இலங்கையில் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (04) நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில், ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாலபே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இவர் குழுவொன்றுடன் அவிசாவளை பகுதிக்கு சுற்றுலா சென்ற சமயம் இத்துயரம் இடம்பெற்றுள்ளது.
அதன்போது ஹோட்டலில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சிகிரியா – திகம்பதஹ பகுதியில் உள்ள மஹா வாவியில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் நண்பர்கள் குழுவுடன் மஹா வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரது சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








