சிவிகே சிவஞானம் அவர்கள், சமூகப் பிரமுகர் மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி 26 ஆம் திகதியாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தம்மை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தமது கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் தீங்கிழைத்ததாக சிவஞானம் தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிவஞானத்தின் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அனுப்பியுள்ள நிபந்தனை கடிதத்தில், ஆதாரமற்ற மற்றும் தீநோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சமூகத்தில் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 14 நாட்களுக்குள் உரிய நஷ்டஈடு வழங்கப்படாவிட்டால், தகுந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு இறுதி நாள் நிகழ்வுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மறவன்புலவு சச்சிதானந்தத்தின் பதில் இதுவரை வெளியாகவில்லை.








