மட்டக்களப்பு போரதீவுப் பற்று (வெல்லாவெளி) பிரதேச சபையின் 09வது அமர்வு இன்று (23) தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக சபையில் முன்வைக்கப்படும் பிரேரணைகள் தொடர்ந்து எதிர்ப்பு மற்றும் நடுநிலை வாக்குகளால் நிறைவேறாமல் உள்ளதால், சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.
சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல பிரேரணைகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தலைமையிலான கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்ததுடன், தேசிய மக்கள் சக்தி சார்பான 03 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் 08 பேரும் பிரேரணைகளை ஆதரித்தனர்.
மொத்தம் 16 உறுப்பினர்கள் கொண்ட சபையில் தேவையான ஆதரவு இல்லாத காரணத்தால் பிரேரணைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்களால் காரணங்கள் தெளிவாக முன்வைக்கப்படாததால், சபையின் சேவை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தவிசாளர் குறிப்பிட்டார்.
இதனால், சபைக்குட்பட்ட 10 வட்டாரங்களில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகளை ஓரிரு வாரங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தும் கடினமான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முன்னர் சபையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் மற்றும் விளக்கங்கள் திருத்தப்படாததால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டத்தின் பதிலின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஆதரவு அல்லது எதிர்ப்பு குறித்து தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவித்தனர்.

















