அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். அதன்படி, இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. அத்தோடு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டது.
இது தொடர்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
ஆனாலும், வேறு சட்டப்பிரிவின் மூலம் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என கடந்த 20ஆம் திகதி ட்ரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த உலகளாவிய சுங்கவரி 10 சதவீதத்திலிருந்து 15ஆக உயர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியானது, 150 நாட்களுக்கு அமுலில் இருக்கும் 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122இன் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே இது நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.








