பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவியாக அரசு வழங்கும் இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 89 இலட்சத்து 3.75 பேர் பயன் பெறுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அஸ்வெசுமா நிதி வழங்கப்படும் நாள்களில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனை கணிசமாக அதிகரிப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறுவதாவது, அஸ்வெசும தொகை கிடைக்கும் நாளில் வழக்கத்தை விட வாடிக்கையாளர்கள் வருகை அதிகரித்து, தினசரி வருமானமும் உயர்வதாகும்.
இந்த போக்கு கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஒரே மாதிரியாகக் காணப்படுவதாகவும், அஸ்வெசும நிதி பெறும் சிலர் குடும்ப தேவைகளைப் புறக்கணித்து அந்தத் தொகையின் ஒரு பகுதியை மதுபானங்களுக்கு செலவிடுகின்றனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேவேளை, வாடிக்கையாளர்களின் பணத்தின் மூலத்தை ஆராய்வது தங்களது பொறுப்பு அல்ல என்றும் சில கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், நலத்திட்ட நிதி உண்மையில் தேவையான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும், குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதங்களும் அதிகரித்து வருகின்றன.








