முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் அண்மைக்கால கருத்துக்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என அலி சப்ரி தனது முகநூலில் பதிவிட்டிருந்தமை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் மற்றும் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கான புலனாய்வுத் தகவல்களை வழங்கியது பிரிகேடியர் அமல் கருணாசேகர தலைமையிலான குழுவே தவிர, சுரேஷ் சலே அல்ல என சரத் பொன்சேகா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலேயின் கைது தொடர்பில் கவலை தெரிவித்து அலி சப்ரி இட்ட முகநூல் பதிவு, தற்போது அவராலேயே நீக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் சுரேஷ் சலேயை ஒரு தேசிய வீரராகச் சித்தரிக்க அவர் முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“யுத்தத்திற்குப் பங்களித்தார்கள் என்பதற்காகக் குற்றங்களிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது” எனக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் தானும் தனது பாதுகாப்புப் பிரிவினரும் எவ்வாறெல்லாம் பழிவாங்கப்பட்டோம் என்பதை நினைவூட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
“நான் தூக்கியெறியப்பட்டேன். எனது பாதுகாப்பிலிருந்த 17 புலனாய்வு அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்த அலி சப்ரிக்கள் பேசவில்லை. ராஜபக்சாக்களே மூத்த அதிகாரிகளைப் பழிவாங்கினார்கள்.” என்கிறார் சரத் பொன்சேகா.
யுத்த காலத்தில் சுரேஷ் சலே இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சபையில் இருக்கவில்லை. அவர் அப்போது மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவித்தாரணவின் கீழ் பணியாற்றிய ஒரு சாதாரண அதிகாரியே. அத்துடன், ‘அரகலய’ போராட்டத்தின் போது இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நோக்கி வருவதை முன்கூட்டியே கணிக்கத் தவறியவர் சுரேஷ் சலே என்றும், போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையைச் சூழ்ந்தபோது அவர் அங்கிருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி பெற்ற அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்- என்றார்








