ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் பல ஆண்டுகால இரகசியத் திட்டமிடல் மற்றும் நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு ஒளிந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
“எங்களுக்கு ஜெருசலேமைப் போலவே தெஹ்ரானைப் பற்றியும் அத்தனை விஷயங்களும் தெரியும். நீங்கள் வளர்ந்த தெருவைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவு துல்லியமாக ஒரு இடத்தைப் பற்றித் தெரிந்திருந்தால், அங்கு நடக்கும் ஒரு சிறிய மாற்றத்தைக் கூட உங்களால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும்,” என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சதித்திட்டத்தின் முக்கிய அங்கமாக, தெஹ்ரான் நகரத்தின் ஒட்டுமொத்த போக்குவரத்து கேமரா வலையமைப்பையும் மொசாட் உளவுப் பிரிவினர் இரகசியமாக ஹெக் செய்திருந்தனர். ஈரான் தனது சொந்த மக்களையும் அரசியல் எதிரிகளையும் கண்காணிக்கப் பயன்படுத்தும் அதே கேமராக்களைக் கொண்டே, இஸ்ரேல் அந்நாட்டின் முக்கியப் பாதுகாப்புப் படையினரைக் கண்காணிக்கத் தொடங்கியது.

இதன் மூலம் காமெனியின் மெய்க்காப்பாளர்களின் வீட்டு முகவரிகள், அவர்களின் பணி நேரங்கள் மற்றும் அவர்கள் யாருக்குப் பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்பது போன்ற நுணுக்கமான தரவுகள் சேகரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன.
குறிப்பாக, தெஹ்ரானின் பாஸ்டர் வீதியில் உள்ள காமெனியின் வளாகத்திற்கு வரும் மெய்க்காப்பாளர்கள் தங்களது வாகனங்களை எங்கே நிறுத்துகிறார்கள் என்பது ஒரு குறிப்பிட்ட கேமரா கோணம் மூலம் துல்லியமாகத் தெரிந்திருந்தது.
இதற்கிடையில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ (CIA) மூலம் களத்தில் இருந்த ஒரு நேரடித் தகவல் தொடர்பாளர் (Human Source) வழங்கிய இரகசியத் தகவல்கள் இந்த நடவடிக்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின.
இஸ்ரேலின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மற்றும் அல்கோரிதம்கள், ஈரானியத் தலைமை குறித்த கோடிக்கணக்கான தரவுகளை அலசி ஆராய்ந்து, சனிக்கிழமை காலை காமெனி ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்தன.

ஒரு போர்ச் சூழல் ஏற்பட்டால், காமெனி போன்ற தலைவர்கள் வெடிகுண்டுகளால் தகர்க்க முடியாத பாதாள பதுங்கு குழிகளுக்குள் (Bunkers) சென்றுவிடுவார்கள் என்பதை இஸ்ரேல் நன்கு அறிந்திருந்தது.
எனவே, அவர் பதுங்கு குழிகளுக்குள் செல்வதற்கு முன்னதாகவே தாக்குதல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
தாக்குதலுக்குச் சற்று முன்பாக, பாஸ்டர் வீதிக்கு அருகிலுள்ள சுமார் பன்னிரண்டு மொபைல் போன் கோபுரங்களை இஸ்ரேல் செயலிழக்கச் செய்தது. இதனால் பாதுகாப்புப் படையினரின் போன்கள் “பிஸி” என்று காட்டின, இது அவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் கிடைக்காமல் தடுத்தது.
இறுதியாக, இஸ்ரேலிய இராணுவத் தளங்களிலிருந்து நேரடியாகப் புறப்பட்ட போர் விமானங்கள், காமெனியின் வளாகத்தின் மீது 30 துல்லியமான ஏவுகணைகளை வீசித் தாக்கின.








