மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெருமளவான ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் இது தொடர்பில் அறிவிப்புகள் விடுத்தும் ஆலயத்திலேயே டெங்கு பரவும் சூழலை வைத்திருந்த ஆலயம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
சமய நிறுவனங்கள் சமயம் வளர்ப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டிராமல் சமூக நலனுடனும் செயற்படமுன்வருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிக நிலையில் உள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
வெற்றுக்காணிகளில் இருந்து டெங்கின் தாக்கம் அதிகளவில் ஏற்படுகின்றது. இவற்றினை கட்டுப்படுத்த வெற்றுக்காணி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு வெற்றுக்காணிகளை தூய்மைப்படுத்தாதவர்கள் தொடர்பான தகவல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு வழங்கப்படுமானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
டெங்கு நுளம்பின் பெருக்கத்தின் தாக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாயல்களின் ஊடாக அறிவுப்புகளை செய்யுமாறும் அறிவுறுத்தல்களை வழங்குமாறும் எமது சுகாதார பிரிவினரால் கோரப்பட்டது. சில ஆலயங்கள் அவற்றினை சிறப்பாக நடைமுறைப்படுத்தின. ஆனால் பல ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கவனத்தில்கொள்ளாமல் மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்காமல் செயற்படுகின்றது.
குறிப்பாக செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கையினை நாங்கள் முன்வைத்தபோது அவர்கள் அதனை செயற்படுத்தவில்லை. மாறாக குறித்த ஆலய பகுதியே நுளம்பு பெருகும் இடமாக காணப்பட்டது. குறித்த ஆலயத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆலயங்கள் வெறுமனே சமயம் சார்ந்த செயற்பாடுகளை மட்டும் முன்னெடுக்காமல் சமூகம் சார்ந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை வீதங்கள் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு சில அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் சுகாதார பணிப்பாளர் இதன்போது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (16) மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் மயில்வாகனம் ருதேசன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்படும் எண்ணிக்கையில் 25வீதமானவை மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தொற்றா நோய்ப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் மயில்வாகனம் ருதேசன் தெரிவித்தார்.








