2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இந்த முகவர் நிலையங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை 1,977 என தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் 2020 ஆம் ஆண்டு 743 முறைப்பாடுகளும் 2021ஆம் ஆண்டு 447 முறைப்பாடுகளும் 2022 ஆம் ஆண்டு 745 முறைப்பாடுகளும் 2023ஆம் ஆண்டு 1,904 முறைப்பாடுகளும் 2024 ஆம் ஆண்டு 3,356 முறைப்படுகளும் 2025 ஆம் ஆண்டு 3,459 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

உரிமம் பெற்ற முகவர் நிலையங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அண்மைய ஆண்டுகளில் பாரிய அளவில் அதிகரித்துள்ளதை இந்தத் தரவுகள் காட்டுகின்றன.
முறைகேடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட முகவர் நிலையங்களின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன . 2020 இல் 42 முகவர் நிலையங்களும், 2021 இல் 20 நிலையங்களும் , 2022 இல் 22 நிலையங்களும், 2023 இல் 42 நிலையங்களும் , 2024 இல் இந்த எண்ணிக்கை 1,003 ஆகத் அதிகரித்தது, பின்னர் 2025 இல் 34 ஆகக் குறைந்துள்ளன.
2022 இல் 90 முகவர் நிலையங்களுக்கு எதிராகவும், 2023 இல் 182 நிலையங்களுக்கு எதிராகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதிகப்படியான கட்டணம் வசூலித்தல், பொய்யான வேலை வாக்குறுதிகள் மற்றும் பணம் செலுத்திய பின் வேலை வழங்காமல் ஏமாற்றுதல் போன்ற முறைகேடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.








