மத்திய கிழக்கு போர் விவகாரத்தில், எவ்வித வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்கும் அடிபணியாது இலங்கையின் நடுநிலைக் கொள்கையை உறுதியாகப் பேணிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் துணிச்சலான முடிவுக்கு, இலங்கையர்கள் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஈரானைத் தாக்*க அனுமதி கேட்ட அமெரிக்காவுக்கு முடியாது என இலங்கை திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அத்துடன், “ஈரானிய போர்க் கப்பலுக்கு அனுமதி வழங்காததன் காரணம், ஈரானியக் கப்பல்கள் அனுமதி கோரிய அதே நாளில், இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் மத்தளவிற்குள் நுழைய அனுமதி கோரின” என்ற முக்கிய இராஜதந்திரத் தகவலையும் அவர் பகிரங்கப்படுத்தினார்.
”இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் நாம் மறுத்ததன் மூலம், இலங்கை நடுநிலை கொள்கையை உறுதியாக பேணியுள்ளது” என ஜனாதிபதி தனது உரையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார். வல்லரசுகளின் கோரிக்கைகளைத் துணிச்சலாக நிராகரித்து, நாட்டின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் அவர் நிலைநிறுத்தியுள்ளமைக்காகவே தற்போது உலகளாவிய ரீதியில் அவர் கொண்டாடப்படுகின்றார்.








