மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இன்று (19) நடைபெற்ற அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. சிறிநாத், தமிழ் மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் இளம் தலைமுறையினர் கலந்து கொண்டு அன்னையின் தியாகத்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் போது அன்னை பூபதியின் அர்ப்பணிப்பு, அகிம்சை போராட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் தமிழ் தேசியத்தின் தொடர்ச்சியான பயணம் குறித்து உரைகள் இடம்பெற்றன.
டாக்டர் சிறிநாத் தனது உரையில், அன்னை பூபதியின் தியாகம் தமிழ் மக்களுக்கு ஒன்றுபட்ட உணர்வையும் உறுதியையும் அளிப்பதாகவும், இளம் தலைமுறைக்கு தமிழ் தேசியம், பண்பாடு மற்றும் வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், நினைவேந்தல் நடைபெறும் இடத்தை புனரமைத்து, மக்களால் அஞ்சலி செலுத்தக்கூடிய நினைவிடமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
































