முள்ளியவளை பகுதியில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலி அறுத்து பறிக்கப்பட்ட சம்பவம் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளை நோக்கி துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை இலக்கத் தகடு இல்லாத, விலையுயர்ந்த NS ரக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
அதன் பின்னர், குறித்த மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதே பகுதிக்கு அண்மையில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
இதனால், தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பில் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நிழற்குடைகள் மற்றும் வீதிகளில் சந்தேகத்திற்கிடமாக திரியும் நபர்களை குறிவைத்து பொலிஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.








