ஈரான் தொடர்பான மோதல் தற்போதைக்கு தணிந்திருந்தாலும், அதன் பொருளாதார தாக்கங்கள் உலகளவில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
IMF-ன் முகாமைத்துவ பணிப்பாளர் Kristalina Georgieva இதனை ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதன் விளைவாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலருக்கும் மேல் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உரங்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன் தாக்கமாக, உணவுப் பொருட்களின் விலையும் 3 முதல் 6 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும், 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
போர் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், சர்வதேச சந்தையை சீரமைக்க குறைந்தது 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நாடுகள் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.








