ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால், இலங்கை பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ருமேனியாவின் கட்டிடத் துறையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 16 பேரிடமிருந்து 21.3 மில்லியன் ரூபாய் பணத்தை சந்தேகநபரும் அவரது மனைவியும் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அவர்களுக்கு போலியான வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








