சிறுமி ஒருவரை தகாத நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கு நேற்று (15) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. அவரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க ஆஜரானார். எனினும், சிறுமியின் உரிமைகளுக்காக எந்தவொரு வெளித் தரப்பும் அல்லது வழக்கறிஞரும் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நீதியை நிலைநாட்டும் பிரிவின் நீதித்துறை பிரதானி சஞ்ஜீவனி அபேகோன் மேற்கொண்ட முயற்சியினாலேயே சந்தேகநபரான தேரருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “சட்டத்திற்கு மேல் மதமும், நீதியை விட பணமும் முன்னிலையாகின்றன” என அவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அநுராதபுரம் நீதிமன்ற நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன, பல்லேகம ஹேமரத்ன தேரரை வரும் 22ஆம் திகதி அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, தனது இளம் வயது மகளை தெரிந்தே சந்தேகநபரிடம் ஒப்படைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறுமியின் தாயாரை பிணையில் விடுவிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவர் இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதிபதி உத்தரவிட்டார்.
முதல் சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்ன தேரரும் கோட்டை நீதிபதி பாசன் அமரசேன பிறப்பித்த உத்தரவின்படி இம்மாதம் 22ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த 12 நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேரர், நீதிமன்ற உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.








