நாடு கடந்த காலத்தைப் போல மீண்டும் ஒருபோதும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்குள் தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்.
‘முழு நாடும் ஒன்றாக’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,
“இலங்கை ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளமையினால் எமது நாட்டின் பொருளாதாரத்தில் தற்காலிகமாகப் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. எமது முக்கிய வருமான வழிகளில் ஒன்றாகக் காணப்படும் சுற்றுலாத்துறை, கடந்த வருட ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருட ஏப்ரல் மாதத்தில் 29 சதவீத வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளது. அத்துடன், உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிப் பிரச்சினைகள் காரணமாக நாட்டின் ஏற்றுமதித் துறையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களால் உள்நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்தின் அளவும் (Remittances) குறைவடைந்துள்ளது. இவை அனைத்தும் சந்தையில் டொலர் பற்றாக்குறை ஏற்படுவதில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேநேரம், உள்நாட்டு ரூபாயின் இந்த வீழ்ச்சி காரணமாக மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவின ஒதுக்கீடு மிகப்பாரிய உயர்வைப்பதிவு செய்துள்ளது. எரிபொருள் இறக்குமதிக்காகக் கடந்த பெப்ரவரி மாதம் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவிடப்பட்டிருந்த நிலையில், மார்ச் மாதத்தில் அச்செலவினம் 216 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் 368 மில்லியன் அமெரிக்க டொலராகவும், கடந்த மே மாதத்தில் அது 522 மில்லியன் அமெரிக்க டொலராகவும் கிடுகிடுவென உயர்வடைந்துள்ளது.
இதன்படி, தற்போது ஒரு மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதிச் செலவினம் மட்டுமே சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இந்நிலையே எமது ரூபாயின் வீழ்ச்சிக்கும், சந்தையில் டொலருக்கான தேவைப்பாடு (Demand) அதிகரிப்பதற்கும் முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது.
தற்போது நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் அடுத்தகட்ட மீளாய்வுப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம். இதில் புதிய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து சில முக்கிய மாற்று யோசனைகளும் அவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கும் பொருட்டு, குறுகிய காலத்திற்கு நாட்டின் எரிபொருள் பயன்பாட்டைப் பொதுமக்கள் சற்றே மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் தேவையற்ற இறக்குமதிச் செலவினங்களைக் குறைப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நாட்டில் மீண்டும் ஒரு டொலர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுத்து, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அனைத்துப் பிரஜைகளும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.








