முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரைப் பிணையில் விடுவிப்பது குறித்து, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்று, அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையானைச் சந்தித்துப் பேசியுள்ளதாகப் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (20) வெளிப்படுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், வெறும் ஒரு வார காலத்திற்குள் பிள்ளையானுக்குப் பிணை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செய்து தருவதாக, மட்டக்களப்புச் சிறையில் வைத்து அவர்கள் பிள்ளையானிடம் உறுதியளித்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
பிள்ளையானின் முன்னாள் செயலாளரும், தற்போதைய முக்கிய சாட்சியுமான அசாத் மௌலானா வழங்கிய அதிரடி வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே, இந்த அதிர்ச்சித் தகவல்கள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது பிரான்ஸ் நாட்டில் அரசியல் புகலிடம் கோரி வசித்து வரும் அசாத் மௌலானாவிடம், அங்குள்ள இலங்கைத் தூதரகத்திற்குச் சென்ற விசேட புலனாய்வுப் பிரிவு (CID) அதிகாரிகள் குழுவினர் விரிவான வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பிரான்சில் வைத்துப் பதிவு செய்யப்பட்ட அசாத் மௌலானாவின் உத்தியோகபூர்வ வாக்குமூலம் மற்றும் அது தொடர்பான மிக முக்கியமான புலனாய்வு ஆவணங்கள் அனைத்தும், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று கோட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








